ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி (91), உடல்நலக் குறைவால் கடந்த புதன்கிழமை இரவு காலமானார். அவரது உடல் அன்றைய தினம் நள்ளிரவே அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, கிலானி உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தி, தேச விரோத கோஷங்களை எழுப்பியதாக கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘காஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியதால், இப்போது இறந்தவர்கள் கூட தப்பவில்லை. ஒரு குடும்பம் தங்கள் விருப்பப்படி துக்கம் மற்றும் இறுதி விடைபெறுவதற்கு அனுமதி இல்லை. உபா சட்டத்தின் கீழ் உள்ள கிலானி குடும்பம், ஒன்றிய அரசின் ஆழமான வேரூன்றிய சித்தப்பிரமை மற்றும் இரக்கமற்ற தன்மையைக் காட்டுகிறது. இது புதிய இந்தியாவின் புதிய காஷ்மீர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.